குழந்தைகளுக்கு ஏராளமானோர் பலப்பல அற்புதமான பாடல்களை எழுதினார்கள். ஆனால் குழந்தைக்கவிஞர் என்றாலே சட்டென நம் மனதில் தோன்றுபவர் அழ.வள்ளியப்பா அவர்கள். 1901 ஆம் ஆண்டில் கவிமணியின் மூலமாகத் தொடங்கிய தமிழ்க் குழந்தை இலக்கியம் நூறாண்டுகளைக் கடந்து தற்போது தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்காக ஏராளமானோர் பாடுபட்டுள்ளார்கள். அத்தகைய பலப்பல எழுத்தாளர்களில் முக்கியமானவர் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா.
குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் அழ.வள்ளியப்பா. அவர் ஏராளமான குழந்தைகளுக்கான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை உடையவர். குழந்தைகளுடன் அன்பாகப் பழகியவர்.