அன்பர்களுக்கு,
வணக்கம். “தொண்டைநாட்டு திவ்ய தேசங்கள்” என்ற இந்த நூலைப் படிக்கத் தேர்வு செய்த நீங்கள் மிகவும் பாக்கியசாலி. இந்த நூலில் மேற்காணும் தொண்டைமண்டலப் பகுதிகளில் அமைந்த 22 திவ்ய தேசங்களைப் பற்றிய தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
கோயில் நகரம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பதினான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. இவ்வாறாக ஒரு நகரத்தில் இவ்வளவு திவ்ய தேசங்கள் வேறெங்கும் அமைந்திருக்கவில்லை. மேலும் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் சிவத்தலங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. அவை இரண்டும் திருநிலாத்திங்கள் துண்டம் (ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்) மற்றும் திருக்கள்வனூர் (ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோயில்) காஞ்சிபுரத்திலேயே அமைந்துள்ளதும் சிறப்பம்சமாகும்.
காஞ்சிபுரத்தில் 1978 முதல் 1981 வரை பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் படித்த போது அனைத்து ஸ்தலங்களுக்கும் பலமுறை சென்று தரிசிக்கும் பேறு பெற்றேன். நான் தொண்டைநாட்டில் அமைந்த 22 திவ்ய தேச ஸ்தலங்களையும் பலமுறை சென்று தரிசிக்கும் பாக்கியமும் பெற்றேன்.